திங்கள், 29 மே, 2017

திரை போடாத திரை நண்பர்கள்

ராஜ்கபூரின் மகன் ரிஷி கபூருடன் ஷஷி கபூர், அமிதாப் 
இயக்குனரும் தன் அண்ணனுமான ராஜ்கபூருடன் ஷஷி கபூர், அமிதாப் 

















 ஷஷி கபூர் அவர்கள் சிறந்த நடிகர் மட்டுமல்ல,உயர்ந்த நண்பரும் ஆவார்.அவரும் அமிதாப் பச்சனும் 12 படங்களில் இணைந்து நடித்திருக்கின்றனர்.

இணையில்லாத இந்த இணை இணைந்து படைத்த திரைப்படங்கள் சிறந்த கலைப்படைப்புகளுக்கு எடுத்துக்காட்டுகளாகவும் முன்மாதிரிகளாகவும் விளங்கின.

Roti Kapada Aur Makaan(1974)

ஷஷி கபூரும் அமிதாப் பச்சனும் முதன்முதலில் இணைந்து நடித்த படம்.மனோஜ் குமார் கதாநாயகனாக நடித்ததுடன், எழுதி இயக்கி தயாரித்திருந்தார்.மனோஜ் குமாரைக் காதலிக்கும் ஜீனத் அமன், மனம் மாறி மணக்க விரும்பும் தொழிலதிபராக ஷஷி கபூரும் மனோஜ் குமாரின் தம்பியாக அமிதாப் கௌரவ வேடத்திலும் நடித்தனர்.

அமிதாப் முதல் பாதியில் வேலையில்லா பட்டதாரியாகவும் பின்பாதியில் கையை இழந்த ராணுவ வீரராகவும் நடித்தார். Angry Young Man வேடங்களில் அதிரடி நாயகனாகத் தோன்றிய அமிதாப் பச்சன் அவற்றுக்கெல்லாம் முன்னோட்டமாக,முதன்முதலில் ஏற்ற சிறிய வேடம் இது.

ஆனால் ஷஷி கபூர் அறிமுகமாகி பத்தாண்டுகளுக்கு மேலாகியிருந்தது.தன்னைக் கதாநாயகனாகவும் சிறந்த நடிகராகவும் நிலைநிறுத்தி இருந்தார்.

புரட்சிகரமான சமூகக் கருத்துகள் கொண்ட இப்படம் பெருவெற்றி பெற்றது.படத்தின் இறுதிக்கட்டத்தில் மட்டுமே சில காட்சிகளில் இருவரும் இணைந்து நடிக்கும் வாய்ப்பு அமைந்திருந்தது.



Deewaar(1975)

சலீம்-ஜாவேத் எழுதி யஷ் சோப்ரா இயக்கிய இப்படம் Key Of Indian Cinema என்று பாராட்டப்பட்டது.

இதில் ஷஷி கபூரும் அமிதாப் பச்சனும் முரண்பட்ட இரு பாதைகளைத் தேர்ந்தெடுத்துக் கொண்ட சகோதரர்களாக நடித்தனர்.சட்டத்த்தைக் காக்கும் காவல்துறை அதிகாரியாக ஷஷி கபூரும் சட்டத்திற்கு புறம்பான தொழில் செய்து பணம் சம்பாதிக்கும் கடத்தல்காரராக அமிதாப் பச்சனும் நடித்திருந்தனர்.

உண்மையில் மூத்தவரான ஷஷி கபூர் இளைய சகோதரராக நடித்திருந்தார்.இந்திய சினிமாவின் முதல் Gangster படமான இதில் காவல்துறை அதிகாரி-கடத்தல்காரர் வேடங்கள் சரிசமமாகக் கையாளப்பட்டிருக்கும்.இதன் தமிழ் மறு உருவாக்கமான 'தீ' உட்பட வேறெந்த படத்திலும் இல்லாத சிறப்பு அது.அதனால் தான் தீவார் உச்சத்தில் வைத்து உச்சிமுகர்ந்து பாராட்டப்படுகிறது.

வேலைவாய்ப்பின்மை,சுரண்டல்,சமூகத்தின் தீமையால் பாதிக்கப்பட்டு தவறான வழியில் செல்வதால் ஏற்படும் விளைவு,ஏழைகளின் இயலாமையால் நடக்கும் துயரம்,தவறு செய்பவனின் தாயின் தவிப்பு எனப் பல    உணர்வுகள்  இப்படத்தில் பேசப்பட்டன.


மணிரத்னம் தன்னுடைய நாயகன் திரைப்படத்தில் இக்காட்சியை மிகச்சிறப்பாக நகலெடுத்திருந்தார் என்று கூறினால் மிகையாகாது.



Kabhi Kabhie(1976)

நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தாலும் அல்லது மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்றாலும் உங்கள் நேரத்தை  இப்படத்துடன் பகிர்ந்து கொள்ளலாம்.

கோபக்கார வாலிபன் அமிதாப் பச்சன் மென்மையான காதலனாகவும் பாசமுள்ள தந்தையாகவும் பொறுப்புள்ள குடும்பத்தலைவராகவும் யஷ் சோப்ரா இயக்கத்தில்  உருமாறி இருந்தார்.அமிதாப்பின் கலையுலக வாழ்வில் இப்படம் ஒரு மணிமகுடம்.தற்காலப் படங்களில் அவர் பங்குபெறும் முதிர்ச்சியான வேடங்களுக்கும் முதன்மையானது.

ஷஷி கபூர் எப்போதும் மகிழ்வோடும் உற்சாகத்தோடும் பண்போடும் இருக்கும் கதாப்பாத்திரத்தில் வெளுத்து வாங்கி விட்டார்.தன் அண்ணன் ராஜ்கபூரின் மகன் ரிஷிகபூருக்கு தந்தையாக நடித்தார்.

வஹீதா ரஹ்மான்,ராக்கி குல்சார்,நீது சிங் ஆகிய பெண் முதன்மை நடிகைகள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேடங்களை உணர்ந்து இயற்கையாக நடித்து இனிமை சேர்த்திருந்தனர்.அரியதும் இனியதுமான இக்காதல் கதை,அழகியல் நிறைந்து அனைவரும் விரும்பும் வகையில் சிறந்திருந்தது.



Immaan Dharam(1977)

இப்படத்தில் தான் அமிதாப் பச்சன்,ஷஷி கபூர் இணையுடன் சஞ்சீவ் குமார் முதன்முதலாக இணைந்தார்.

சமூக சிந்தனையுடன் சலீம்-ஜாவேத் எழுதிய இப்படத்தில் பொய்சாட்சி கூறிப் பிழைப்பவர்களாக ஷஷி-அமிதாப் நடித்திருந்தனர்.அவர்களால் பாதிக்கப்பட்டு,பின்னர் அவர்கள் திருந்தி நல்லவர்களாக வாழக் காரணமாக விளங்கும் முக்கிய வேடத்தில் சஞ்சீவ் குமார் நடித்தார்.

கட்டடம் கட்டும் தமிழ்ப்பெண் தொழிலாளியாக ஜெமினி கணேசன் மகள் ரேகா ஷஷி கபூரின் இணையாக நடித்திருந்தார்.கவர்ச்சி நடன நடிகை ஹெலன் முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் வந்து மனதை உருகச் செய்தார்.சமூகச் சிந்தனைகளுடன் சமயச் சிந்தனையும் பேசிய இப்படம் சலீம்-ஜாவேத் படங்களில் வியக்கத்தகுந்த பெருமை வாய்ந்த படமாகும்.

இப்படத்தின் பாதிப்பிலேயே பாக்கியராஜ் 1981ல் பொய்சாட்சி என்ற படத்தை எடுத்தார்.


Trishul(1978)


சஞ்சீவ் குமார்,வஹீதா ரஹ்மான்,அமிதாப் பச்சன்,ஷஷி கபூர்,ஹேமமாலினி,ராக்கி குல்சார்,பூனம் தில்லோன்,பிரேம் சோப்ராஆகியோர் நடித்த,சலீம்-ஜாவேத் கதை வசனத்தில்,யஷ் சோப்ரா இயக்கத்தில் உருவான  இப்படம் தன்னொழுக்கத்தையும் தன்முனைப்பையும் தன்மான உணர்ச்சியையும் பறைசாற்றியது.

தன் தாயின் வற்புறுத்தலின் பேரில்,வஹீதா ரஹ்மானை கைவிட்டு,பணக்கார முதலாளியின் மகளை மணம் புரியும் சஞ்சீவ் குமார்,அவரைப் பழிவாங்கத் துடிக்கும் மூத்த மகன் அமிதாப்,அவரின் இரண்டாவது மகன் ஷஷி கபூர் ஆகியோருக்கு இடையேயான உணர்ச்சிப் போராட்டமே கதை.  

பணத்திற்காக மனதை மாற்றிக்கொள்ளும் கோழையாகத் தொடங்கி,கௌரவமும் கர்வமும் தலைக்கேறிய பெரிய மனிதராக வாழ்ந்து,இறுதியில் மனம் திருந்தி,தன் மூத்த மகனுக்காக உயிர்துறந்து நெகிழவைக்கும் பாத்திரத்தில் நடிப்பின் சிகரத்தில் தன் கொடியை உயரப் பறக்கவிட்டார் சஞ்சீவ் குமார்.

தன் ''முறையற்ற தந்தை''யை, தொழிலில் தோற்கடித்து,அவரது குடும்பத்தைப் பழிவாங்கத் துடித்து பின்னர் அவ்வெண்ணம் மறைந்து,பணத்தை விட குணமே சிறப்பு என்று புரியவைத்து,இறுதியில் அவரை ஏற்றுக்கொள்ளும் பாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் அமிதாப்.

அமிதாப் என்ன செய்தாலும் அதை அகம் நகும் நட்புடன் அணுகும் மென்மையும் மேன்மையும் கொண்டவராக ஷஷி கபூர் சிறந்த பாத்திரத்தை ஏற்றிருந்தார்.தன் தங்கையின் திருமணத்தை,தந்தையின் அனுமதியின்றி நடத்த முனையும் அமிதாப் மீது கோபப்பட்டாலும் இறுதியில் உண்மை தெரிந்து தன் மூத்த சகோதரனை வாஞ்சையுடன் அணைத்துக்கொள்ளும் அன்பான சகோதரராக நெஞ்சைத் தொட்டிருந்தார்.

இப்படத்தில் மூன்று பாடல்களை ஜேசுதாஸ் பாடியிருந்தார்.அதில் ஒரு பாடல் படத்தில் இடம்பெறவில்லை.



Kaala Patthar(1979)

தீவார்,திரிசூல்,வரிசையில் சலீம்-ஜாவேத்-யஷ் சோப்ரா-அமிதாப்-ஷஷி கபூர் கூட்டணியில் மூன்றாவது மற்றும் கடைசி படம்.நிலக்கரி சுரங்கத்தைப் பற்றிய கதை.தொழிலாளராக அமிதாப்,தொழிலாளர் நலம் நாடும் அதிகாரியாக ஷஷி கபூர்,தொழிலாளர்களைச் சுரண்டும் முதலாளியாக பிரேம் சோப்ரா நடித்திருந்தனர்.


Suhaag(1979)

கதாநாயகர்களின் வீரசாகசப் படங்கள் அனைத்திற்கும் மன்மோகன் தேசாயின் படங்களே முன்னோடி.அதிலும் இது செம படம்.கண்ணிழந்த ஷஷி கபூரின் காவலர் பணியை அமிதாப் செய்வதும் அம்ஜத் கான் உயிருடன் இருக்கும்போதே கண்தானம் செய்வதும் உச்சபட்ச காமெடி.


Do Aur Do Paanch(1980)

ஷஷி கபூரும் அமிதாப் பச்சனும் நடித்த முழுநீள நகைச்சுவைத் திரைப்படம் இது.செல்வந்தர் ஒருவரின் மகனைக் கடத்த பாட்டு வாத்தியாராக ஷஷி கபூரும் P.T. வாத்தியாராக அமிதாப் பச்சனும் வேடமிட்டு, பள்ளிக்குள் நுழைந்து போடும் போட்டியே கதை.தேவர் பில்ம்ஸ் தயாரித்த படத்தை ராகேஷ் குமார் இயக்கியிருந்தார்.



Shaan(1980)

காவல்துறை அதிகாரியாக இருந்த அண்ணனைக் கொன்றவர்களை அவரது சகோதரர்கள் பழிவாங்கும் கதை.அண்ணனாக சுனில் தத்தும் சகோதரர்களாக ஷஷி கபூரும் அமிதாப்பும் நடித்த இப்படம் ஷோலே படத்தின் பெருவெற்றியைத் தொடர்ந்து ரமேஷ் சிப்பி-சலீம்-ஜாவேத் இணைந்து இப்படத்தை உருவாக்கினர்.மனதை மகிழ்விக்கும் அருமையான பாடல்கள் கொண்ட படம்.ஷோலே படத்தில் விதவையின்  காதலை கனத்த கவிதையாகச் சொன்ன சலீம்-ஜாவேத் இப்படத்தில் வில்லன்களால் மனைவியை இழந்த சத்ருகன் சின்ஹாவுக்கும் கணவரை இழந்த ராக்கி குல்சாருக்கும் இடையே போகிற போக்கில் மென்மையான உறவை இழையோட விட்டிருப்பது சிறப்பு.

Silsila(1981)

ஷஷி கபூர் இப்படத்தில் கதாநாயகனாக இல்லாமல் முக்கிய வேடத்தில் தோன்றி நடித்திருந்தார்.அமிதாப்-ஜெயா பாதுரி-ரேகா ஆகியோரின் உண்மை வாழ்வினைப் படம் பிரதிபலிப்பதாகச் சொல்லப்பட்டது.முக்கிய வேடத்தில் சஞ்சீவ் குமாரும் நடித்திருந்தார்.ரேகா அமிதாப் பச்சனுடன் இணைந்து நடித்த கடைசி படம்.யஷ் சோப்ரா இயக்கத்தில் உருவான இப்படத்தில் லதா மங்கேஷ்கருக்கு போட்டியாக 'நீலா ஆஸ்மான் ஸோ கயா' என்ற மெலடி பாடலையும் தன் தந்தை ஹரிவன்ஷ்ராய் பச்சன் எழுதிய கொண்டாட்டப் பாடலான 'ரங் பர்ஸே' என்ற பாடலையும் பாடி அசத்தியிருந்தார்.





Namak Halaal(1982)

பிரகாஷ் மெஹ்ரா இயக்கிய இப்படம் ஷஷி கபூர்-அமிதாப் கதாநாயகர்களாக இணைந்த கடைசி படம்.ஷஷி கபூர் முதலாளியாகவும் அமிதாப் அவரது விசுவாசமான வேலைக்காரனாகவும் நடித்த இப்படம் ரசிகர்களை மகிழ்விக்கும் சிறந்த நகைச்சுவைக் காட்சிகள், பாடல் காட்சிகள் நிறைந்தது.

Akayla(1991)

1983 முதல் 1990 வரை இருவரும் இணைந்து நடிக்கவில்லை.1991ல் அமிதாப்,ரிஷி கபூர் நடித்த அஜுபா திரைப்படத்தை தயாரித்து இயக்கியிருந்தார் ஷஷி கபூர். 

அடுத்து,ரமேஷ் சிப்பி இயக்கத்தில் சலீம் கான்(சலீம்-ஜாவேத் இரட்டையரில் ஒருவர்) எழுத்தில் உருவான இப்படத்தில் அமிதாப்பின் மேலதிகாரியாக,காவல்துறை உயரதிகாரியாக கௌரவ வேடத்தில் நடித்திருந்தார் ஷஷி கபூர்.இவர்கள் இணைந்து பணியாற்றிய கடைசி படம் என்ற வகையில் சிறப்பு பெற்ற படம் இது.



ஞாயிறு, 21 மே, 2017

இதயகீதமே எங்கே போனாய்?








































இளங்கலையில்
இயற்பியலை
இலக்காகக்
கொண்டவரே!

தாய்மொழிப் பற்றில்
தமிழிலக்கியங்களோடு
வாழ்ந்தவரே!

முதுகலையில்
பச்சையப்பனின்
பாசறையில்
பைந்தமிழோடு
பழகி
முத்தமிழோடு
விளையாடிய
முத்துகுமரனே!

விருப்பம் தேற்றி
பல வீணைகள் மீட்டிய
பாடல்களை
ஆய்வாகக் கொண்டு
சென்னை பல்கலையில்
முனைப்போடு
முனைவர் பட்டம் பெற்றவரே!

அன்பூட்டும்
அறிவுமதியின்
ஆலோசனையில்
பாடலியற்றப்
பயின்றவரே!

அறியா வயதிலே
உன் அன்னையின்
அன்பு கூட
அரிதாகி விட்டதால்
உன் அன்பு சிறக்க
ஆற்றல் மேம்பட
நல்ல பண்பு தழைக்க
ஊக்கத்தைப்
பரிமாறியது
அன்னை நூலகம்

உன்னை
எப்போதுமே
சுற்றி வந்தது
நண்பர்கள் கூட்டம்
மட்டுமல்ல
நீ நட்பு கொண்ட
இலக்கியமும் தான்

உன் அறை 
பொருட்கள்
நிறைந்தது அல்ல
புத்தகம் 
நிறைந்தது

இயக்குனராவது
உனது எண்ணம்
பல இசைகளுக்கு
பாடல் இயற்றி விட்டது
உன் கைவண்ணம்

உன் பாடல்
பலர் இதயங்களுக்கு
பல்லாக்கு

எல்லோருக்கும்
முதல் எழுத்து அ
நீ மீட்டிய ஆனந்த யாழும்
நீ தீட்டிய அழகும்
உன்னை 
தேசிய விருதுக்கு
அழைத்துச் சென்ற
அதிர்ஷ்ட எழுத்துகள் 
ஆ,அ

உன் குடும்பம்
இழந்தது என்னவோ
உன்னைத்தான்
கலையுலகம்
இழந்து விட்டதோ
இன்னும்
எண்ணில் அடங்காத
உன் எண்ணத்தில்
உதிக்கவிருந்த
பாடல்களை

உன் உயிரை
எடுத்தவனால் 
எடுக்க முடியுமா
ஏட்டில் பதிந்த
உன் கவிதைகளையும்
இசையில் கலந்த
பாடல்களையும்?!

வீரநடையில் தான்
உன் பாடல்
நடை தொடங்கியது
மூங்கில் மரமாய்
வளர்ந்த உன்னை
விதி வந்து
வேரறுத்து விட்டதே!

மஞ்சள் காமாலையை 
மனு அனுப்பி
உன்னை வாங்கி விட்டதே 
மரணம்!

காஞ்சி கன்னிகாபுரத்து
கவிதை நாயகனே!
நீ கண்மூடி
எங்களைக்
கண்கலங்க
வைத்து விட்டாயே!

-கல்யாணமந்தை தா.சரவணன் 




திங்கள், 15 மே, 2017

ரஜினி அரசியல் - வெற்றி நிச்சயம்

தமிழக மக்களிடையே ரஜினிகாந்த் செல்வாக்கு பெற்றவர் என்பதையோ அந்த செல்வாக்கை அவர் பரீட்சித்துப் பார்த்திருக்கிறார் என்பதையோ யாரும் மறுப்பதற்கில்லை.ஆனால் அதில் அவர் வெற்றியும் பெற்றிருக்கிறார்; தோல்வியடைந்தும் இருக்கிறார் என்பதே நாம் கவனிக்க வேண்டிய செய்தி.

அவரே விட்டாலும் ஊடகங்கள் அவரை விடுவதாக இல்லை. கடந்த முறை ரஜினி - ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ந்தபோது பேருந்துகள் வேலை நிறுத்தம் தொடர்பான செய்திகளைக்  காட்டிக்கொண்டிருந்த அத்தனை ஊடகங்களும் உடனுக்குடனே ரஜினி-ரசிகர்கள் சந்திப்பைக் காட்டத் தொடங்கி விட்டன. ஜோதிடர் ஷெல்வி போன்றவர்களைப் பேச வைத்து, தீவிர இந்துமதப் பற்றாளரான அந்த மீசையும் தாடியும் வெச்ச குழந்தையின் மனதை மதவாத சக்திகளே கலைத்துவிடப் பார்க்கின்றன.

தன்னை எப்போதும் முதலிடத்தின் பரபரப்பிலேயே வைத்துக்கொள்ள விரும்பும் ரஜினிகாந்த், விருப்ப ஓய்வு எடுத்துக்கொண்ட  சிவாஜி, அமிதாப், 87 வயதிலும் தமிழக முதல்வராக தலைமைப் பொறுப்பிலிருந்த கருணாநிதி, தமிழக அரசியலில் மிகப்பெரும் ஆளுமையான மறைந்த முதல்வர்  ஜெயலலிதா என அனைவரிடமும் அருகருகே இருந்து பாடம் படித்திருக்கிறார்.தன் முதலிடத்தை அவர் விட்டுக்கொடுக்கவோ, இழக்கவோ விரும்புவதில்லை.தன் முதலிடத்தைத் தக்கவைத்துக் கொள்ளவும் பரபரப்பான பிரபலமாகத் தன்னைக் காட்டிக்கொள்ளவும் வேண்டியதைச் செய்து கொண்டிருப்பார்.

அவர் அரசியல் பேசுகிறாரோ, இல்லையோ, அரசியல் அவரைப் பேசும்படி செய்துள்ளார்.அவர் அரசியலுக்கு வருகிறாரோ, இல்லையோ தேர்தல் அரசியலில் வெற்றி பெறுகிறாரோ, இல்லையோ ஆனாலும் தமிழ்த்திரையுலகின் உச்சநட்சத்திரம் என்ற பெயரைத் தக்கவைக்க அவர் எடுக்கும் முயற்சிகளிலும் முடிவுகளிலும் பெயரளவில் அவர் பேசும் அரசியலிலும் அவருக்கு வெற்றி நிச்சயம்.

தன் திரையுலக வாழ்வின் முழுமையையும் நிறைவையும் தானும் உணர்ந்து கொண்டு அனைவரும் உணரும் வகையில் "கபாலி"யை முன்னுதாரணமாகக் கொண்டு அதை விடச் சிறப்பான படங்களைத் தர வேண்டும் என்பதே அவரது நலம் நாடுபவர்களின் எண்ணமாகும்,

இன்று மாநிலத்தின் ஆளுங்கட்சியையே பாஜக ஆட்டி வைக்கிறது என்று சொல்லப்படும் சூழ்நிலையில், ரஜினி பாஜகவின் மேல் ஒருவகை அபிமானம் இருந்தாலும் கூட, அவ்வாறு ஆட்டுவிக்கப்படும் ஆளாக இருக்கவில்லை என்பதே மக்களுக்கு அவரிடமிருந்து தேவையான விஷயமாகும்.

களத்தில் இறங்க அவசரமில்லை என அண்மையில் அறிவித்திருந்த ரஜினி இனியும் காலம் தாழ்த்திக் கொண்டிருந்தால் அரசியலில் அவரது பங்கு குறித்து பேசும் அவசியம் இல்லாமல் போய்விடும் என உணர்ந்திருக்க வேண்டும்,

சினிமாவில் நடக்கும் கட்டணக்கொள்ளை, கந்துவட்டி கொடுமை, அவரது பள்ளியில் உள்ள சிக்கல்கள் இது குறித்து முதலில் கவனித்தால் அவர் மீது பொது மக்களுக்கு நம்பிக்கை வளர வாய்ப்பாக அமையும். அது அவரது ரசிகர்களுக்கு அவர் தரும் பிறந்தநாள் பரிசாகவும் இருக்கும்.


புதன், 10 மே, 2017

கவிதைகள்




























காற்று 

சுவரைத் தாண்டி
வளர்ந்த கிளையை
வெட்டும்படி
வீட்டு வாசலில்
சருகை உதிர்த்ததற்காக
சண்டை போடும்
அண்டை வீட்டுக்காரர்களிடம்
எந்த சலனமுமில்லாமல்
அவர்கள் சுவாசப்பையில்
சங்கமித்துவிட்டு வருகிறது
என் வீட்டு மரக்காற்று.

இதயத்தில் நீ 

நான் 
உன் பார்வையில் தானே 
விழுந்தேன்! 
நீ 
எப்படி விழுந்தாய்
எடுக்க முடியாத
என் இதய 
உண்டியலில்?

கானல்

அதே உயரம்
அதே தேகம்
அதே நிறம்
அதே ஆடை ஒப்பனை
ஆவலுடன் அருகில்
வந்தால்
நீ இன்றி வேறு பெண்
என்னை 
அபகரித்து
வேறொருவனுக்கு
அடைக்கலமாகிப்
போனவளே!
நான்
செல்லுமிடமெல்லாம்
ஏதோ ஒரு
பெயர்ப்பலகையில்
யாரோ
உச்சரித்த
உன் பெயர் ஒலியில்
ஏமாந்து 
நிலை திரும்பும்
போதெல்லாம் உணர்கிறேன்
உன் நினைவு வந்து
அடித்த வலியே! 

பூக்காரி

வகிடு எடுத்த
வாட்ட முகக்காரி
வயிற்றைச் சுருக்கி
ஆழத்திலிருந்து ஓசை 
எழுப்புகிறாள்
முழத்தின் விலையைக் கூற
வாடும் பூக்களுக்கு 
நீர் தெளித்தபடி....

கல்யாணமந்தை தா.சரவணன்




சனி, 6 மே, 2017

பாகுபலி

நேற்று மூலக்கடை சண்முகாவில் காலைக்காட்சி பாகுபலி பார்த்தேன்.சண்முகா திரையரங்கில் படம் பார்த்து வெகுநாட்களாகி விட்டது.அதிக வேலை இருந்தததனால் அருகிலேயே உள்ள திரையரங்கிற்குச் சென்று குடும்பத்துடன் பார்த்தாகி விட்டது.



அதிகமான பொருட்ச்செலவைக் கோரும் இப்படத்தை Back to Back ஆக இரண்டு பாகங்களாக இயக்கியளித்த ராஜமவுலி பாராட்டப்பட வேண்டியவர் தான்.









































ஆனால் இப்போது வரும் படங்கள் பிரம்மாண்டத்தையும் பொருட்செலவையும் தொழில்நுட்பங்களையும் நம்பியே வருகின்றன.சில படங்கள் சில தொழில்நுட்பங்கள் இருப்பதாக நம்பவைக்கப் பார்க்கின்றன.எந்திரன்,ஷமிதாப்,தனி ஒருவன் போன்ற படங்கள் இதற்கு உதாரணமாகின்றன.

நான் முதல் படத்தைப் பார்க்காததால்,முதல் படத்தின் முடிவில் போடப்பட்ட மர்ம முடிச்சைப் பார்க்காததால் இரண்டாம் படத்தின் இடைவேளைக்கு முந்தைய பகுதியை மட்டும் மிகவும் ரசித்துப் பார்க்க முடிந்தது.





சத்யராஜ் ,ரம்யா கிருஷ்ணன் ஆகிய அனுபவமிக்க நடிகர்களின் வேடங்கள் கனமானவையாகத் தோற்றமளித்தாலும் உண்மையில் அவை வில்லனின் கைப்பாவைகளாகவே இருக்கின்றன.கண்களுக்கு விருந்தாக, காட்சிகளைப் படைத்துக்காட்டுவதில் கவனம் செலுத்திய இயக்குனர் கதையில் கருத்தும் கவனமும் செலுத்தவில்லை.

வரலாற்று புனைவு படங்களில் பி.ஆர்.பந்துலு  இயக்கிய வீரபாண்டிய கட்டபொம்மன்,கர்ணன்,ஆயிரத்தில் ஒருவன் ஆகிய படங்களும் கே.சங்கர் இயக்கிய அடிமைப்பெண்ணும் சிறந்த படங்கள்.







இரட்டையர் ஆள்மாறாட்டக் கதைகளாக அமைந்த படங்களில் எம்ஜியாரின் நாடோடி மன்னனும் சிவாஜியின் உத்தமபுத்திரனும் வடிவேலுவின் இம்சை அரசன் 23-ம் புலிகேசியும் சிறந்த வரலாற்றுப் புனைவு பொழுதுபோக்கு திரைப்படங்கள்(Historical Fiction Entertainers).



இம்சை அரசன் 23ம் புலிகேசி திரைப்படத்தின் வெற்றி விழா


பாகுபலி மிகச் சாதாரணமானதொரு படமே.இதனைப் போற்றுவதோ ஏற்றி வைத்துப் பேசுவதோ ஏற்புடையதல்ல.





சத்யராஜ் இதுபோன்ற வேடங்களைத் தவிர்த்துக் கொள்வது நல்லது. சத்யராஜ் வாட்டாள் நாகராஜுக்கு தெரிவித்த வருத்தம் கூட படக்குழுவினர் கொடுத்த அழுத்தத்தினாலோ என்று "என்னால் பிரச்சனை வருமென்றால் என்னை வைத்துப் படமெடுக்க வேண்டாம்.நடிகனாக இருப்பதை விட தமிழனாக இருப்பதே பெருமை" என்ற அவரது பேச்சிலிருந்தே எண்ணத் தோன்றுகிறது.