செவ்வாய், 28 மார்ச், 2017

வந்தார் பில்லா வென்றார் கபாலி - 03


1983ல் ரஜினியின் இந்திப்பட அறிமுகம் நிகழ்ந்தது.SACயின் சட்டம் ஒரு இருட்டறை படத்தின் இந்திப்பதிப்பில் ரஜினி விஜயகாந்த் வேடத்தில் நடித்தார்.அந்தா கானூன் என்ற அப்படத்தில் அமிதாப் பச்சன் நட்புக்காக கௌரவ வேடத்தில் நடித்துக் கொடுத்தார்.



இந்தப்படத்தில் வரும் அமிதாப்பின் பாகத்தையே develop செய்து தோஸ்த்(2001) என்ற படத்தை SAC எடுத்தார்.




அடுத்து 1982ல் காதிர் கான் எழுதி ரவி டாண்டன் இயக்கிய Khud-daar திரைப்படம் 1985ல் படிக்காதவன் என்ற பெயரில் உருவானது.மறைந்த இயக்குனர் ராஜசேகர் இயக்கியிருந்தார்.அமிதாப் பச்சனின் மரியாதைக்குரிய சஞ்சீவ் குமார் நடித்த வேடத்தில் மிகப்பொருத்தமாக  சிவாஜி நடித்திருப்பார். It was a Masterly remake.
படப்பிடிப்பில் ரவி டாண்டனுடன் சஞ்சீவ், அமிதாப்.







Namak haraam(1973),Majbooor(1974),Adalat(1976),Muqqadar Ka Sikkandar(1978),Naseeb(1981) ஆகிய அமிதாப் நடித்த படங்களின் தமிழ்ப்பதிப்புகளான உனக்காக நான்(1976), நான் வாழ வைப்பேன்(1979),(இப்படத்தில் ரஜினி பிரானின் வேடத்தை ஏற்றிருந்தார்). விஸ்வரூபம்(1980),அமரகாவியம்(1981),சந்திப்பு(1983)    (அமிதாப் பச்சன்,பிரான் இருவரது வேடத்தையும் சிவாஜியே ஏற்றிருந்தார்.)படங்களின் நாயகன் அப்போதைய சூப்பர் ஸ்டார்  சிவாஜி, தன் நெருங்கிய நண்பர் பாலாஜியின் பில்லா, தீ ஆகிய திரைப்படங்களை விட்டுக்கொடுத்திருந்தார்.இந்த படங்களின் தெலுங்கு வடிவங்களில் சிவாஜியின் சக நடிகரான என்.டி.ஆர். நடித்திருந்தார். இதைப்போல் ப்ரேமபிஷேகம் தமிழ் வடிவமான வாழ்வே மாயம் படத்தில் நாகேஸ்வர ராவ் வேடத்தை கமலுக்கு விட்டுக்கொடுத்திருந்தார்.

சிவாஜி, தமிழக சூப்பர் ஸ்டார் பட்டத்தையே ரஜினிக்கு கொடுக்கத் தயாரான படம் படிக்காதவன்.சிவாஜியின் வாரிசாக ரஜினி சொல்லப்படும் வசனமும் அமிதாப் பச்சனைப் பாராட்டி ஒரு வசனமும் படத்தில் இடம்பெற்றிருந்தது.அமிதாப் நடித்த Imman Dharam(1977) போஸ்டர் கூட ஒரு காட்சியில் பயன்படுத்தப்பட்டு இருந்தது.






















































யஷ் சோப்ரா இயக்கி சலீம் ஜாவேத் எழுதிய தீவார் தமிழில் தீ திரைப்படமாக உருவானதுபோல் 1986ல்,  Trishul(1978) திரைப்படத்தின் தமிழ்ப்பதிப்பாக மிஸ்டர் பாரத் திரைப்படம் வெளியானது.S.P. முத்துராமன் இயக்கத்திலும் விசுவின் திரைக்கதை வசனத்திலும் வேறொரு வண்ணம் பெற்றது. சஞ்சீவ் குமார்,சஷி கபூர் வேடங்களை பெருமளவு மாற்றி இருந்தனர்.சலீம்-ஜாவேத் திரைக்கதையை பில்லா,தீ படங்களுக்கு பயன்படுத்திக்கொண்டது போல் பயன்படுத்திக்கொள்ளவில்லை. இந்தியில் உணர்வுபூர்வமான காவியமாக உருவெடுத்த படம் தமிழில்  பொழுதுபோக்குப் படமாக உருவானது.


இந்தப் படத்தில் சஷிகபூர் வேடத்தில் நடித்த S.Ve.சேகர் "இது தோ சூல் தான்" என்று தன்னுடைய வேடம் குறித்து வருத்தப்பட்டதாகவும் அதற்கு சத்யராஜ் "இல்லை,இல்லை இது ஏக் சூல் தான்" என்று அவரைச் சமாதானப்படுத்தும் வகையில் கூறியதாகவும் ஒரு செய்தி உண்டு.சத்யராஜ் ரஜினியுடன் கடைசியாக இணைந்து நடித்த படம் இது தான்.

1985ல் வெளியான மன்மோகன் தேசாய் இயக்கிய Mard திரைப்படத்தை ரஜினி மாவீரன் என்ற பெயரில் தயாரித்தார்.தமிழின் முதல் 70mm படம் இது. இந்தியில் அமிதாப் தந்தையாக நடித்த தாராசிங்  தமிழிலும் ரஜினிக்கு தந்தையாக நடித்தார். ராஜசேகர் இயக்கியிருந்தார்.










1987ல் பிரகாஷ் மெஹ்ரா இயக்கிய நமக் ஹலால்(1982) திரைப்படம் வேலைக்காரன் திரைப்படமாக உருவானது. கவிதாலயா தயாரித்து எஸ்.பி.முத்துராமன் இயக்கிய இப்படம் தோல்விகள் பல அடைந்திருந்த வேளையில் ரஜினிக்கு  வெற்றிமகுடம் சூட்டியது.

"I can speak English" in Namak Halaal and Velaikkaran










1978ல் உருவான Kasme Vaade 1988ல் தர்மத்தின் தலைவனாக உருமாறியது. பஞ்சு அருணாச்சலம் எழுதி எஸ்.பி.முத்துராமன் இயக்கிய இப்படம் தேவர் பிலிம்ஸ் நிறுவனத்தின் இறுதித் தயாரிப்பாகும்.ராஜ்கபூரின் மகன் ரன்திர் கபூரின் வேடம் பிரபுவுக்கும் ராக்கி குல்சார் வேடம் சுஹாசினிக்கும் கொடுக்கப்பட்டு இருக்கும். நீத்து சிங் நடித்த வேடத்தில் குஷ்பூ தமிழ்த் திரையுலகுக்கு அறிமுகமானார். ஞாபகமறதி உள்ளவராக ரஜினி நடித்த நகைச்சுவைக் காட்சிகள் இணைக்கப்பட்டு இருக்கும்.




தர்மத்தின் தலைவன் படத்தில் தமிழாசிரியராகத் தோன்றும் ரஜினி கம்பராமாயணத்தின் ஒரு பாடலை வகுப்பெடுப்பதாக அமைந்த காட்சி மிகச்சிறப்பு.


1977 ல் வெளியான Khoon Pasina 1989 ல் சிவா என்ற பெயரில் உருவானது. ரகுவரன் வினோத் கன்னா நடித்த வேடத்தில்  இரண்டாம் கதாநாயகனாக நடித்திருப்பார்.வைரமுத்து வசனம் எழுதிய நட்பு, வண்ணக்கனவுகள் போன்ற படங்களை இயக்கிய அமீர்ஜான் இயக்கியிருப்பார்.





பிரகாஷ் மெஹ்ரா இயக்கிய லாவாரிஸ் (1981) திரைப்படம் 1990ல் பணக்காரன் திரைப்படமாக உருவானது.பெற்றோரின் ஆதரவில்லாத கதாநாயகனின் வலி நிறைந்த வாழ்க்கையாக லாவாரிஸ் பதிவு செய்யப்பட்டிருக்கும்.ஆனால் பணக்காரன் அழகான திரைக்கதையால் மகிழ்ச்சியூட்டும் நெகிழ்ச்சியான திருப்பங்களைக் கொண்டது.தமிழில் விஜயகுமார் நடித்த வேடத்தில் இந்தியில் வில்லன் நடிகர் அம்ஜத் கான் நடித்திருப்பார். ஒரு சண்டைக்காட்சியில் அமிதாப் தமிழ்,தெலுகு போன்ற மொழிகளைப் பேசுவது போல் ரஜினியும் பேசுவார்.'நூறு வருஷம்' பாடல் காட்சி  அல்கா யாக்னிக் மற்றும் அமிதாப் பச்சன் பாடிய "மேரே அங்கனே மெய்ன் துமரா க்யா காம் ஹை?" என்ற பாடல் காட்சியிலிருந்து எடுக்கப்பட்டது.இளையராஜா ரஜினிக்கு பின்னணி பாடிய ஒரே பாடல் உள்ள ஒரே படம்.







1991 ல் வெளியான முகுல் எஸ்.ஆனந்த் இயக்கத்தில் உருவான Hum திரைப்படம் 1995ல் பாஷாவாக மாற்றம் பெற்றது. மிகப்பெரும் பொருட்செலவில் கிளாசிக்காக எடுக்கப்பட்ட இப்படத்தில் அமிதாப்பின் தம்பியாக நடித்தும் இருந்தார் ரஜினி.(இன்னொரு தம்பி கோவிந்தாவை அமிதாப் தன் செல்வாக்கைப் பயன்படுத்தி கல்லூரியில் சேர்ப்பதாக ஒரு காட்சி யோசிக்கப்பட்டு நீக்கப்பட்டிருக்கும்.தமிழில் அதை முக்கிய காட்சியாகச் சேர்த்திருப்பார்கள்.


சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் உருவான பாஷா சத்யா மூவிஸ் தயாரிப்பில் உருவான கடைசிப் படமாகும்.மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற இப்படத்தின் பாதிப்பிலேயே பல தென்னிந்திய ஆக்ஷன் மசாலா படங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன.










1990களில் வெளிவந்த ஹம் ஆப்கே ஹேன் கோன், தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே போன்ற  படங்களின் பெருவெற்றி அமிதாப்பின் வழியை மட்டுமல்ல, பாலிவுட்டின் வழியையே மாற்றி விட்டது.காலச்சூழ்நிலைக்கு ஏற்ப பரிணாம வளர்ச்சியடைந்து பண்பட்ட அமிதாப், தன்னை இன்னொரு பரிமாணத்தில் சிறப்பாக வெளிப்படுத்தத் தொடங்கினார்.


A Scene from Hum Aapke Hain Koun




இந்த நிலையில் ரஜினி தொடர்ந்து சிவாஜி,எந்திரன்,கபாலி என இந்திய சூப்பர்ஸ்டாராக தன்னை தென்னிந்தியாவிலிருந்தே நிலைநிறுத்திக்கொண்டுள்ளார்.




சிவாஜி திரைப்படம் வெளியான சமயத்தில் இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகராக அறியப்பட்ட ரஜினி "இந்தியாவின் சூப்பர் ஸ்டார் யார்?" என்ற விவாதத்தை உருவாக்கி விடையையும் அவரே கூறி இருந்தார். “Amithabh is an Emperor, I am a king probably” என்றார்.


இந்த பதிலை அவர் தன்னடக்கத்துடன் கூறினாலும் இந்த கூற்று தான் அவரது குறிக்கோளாக அமைந்து அவரை செயல்வீரராக வைத்துள்ளது என்று சொல்லலாம்.

************************* மகிழ்ச்சி *************************


திங்கள், 27 மார்ச், 2017

வந்தார் பில்லா வென்றார் கபாலி - 02

அபூர்வ ராகங்கள் படத்தில் இளம்வயதில் நடுத்தர வயது நோயாளியாக வேடமேற்று அறிமுகமானார் ரஜினிகாந்த்.

தன்னுடைய சிறப்பான நடிப்பாற்றலால் Abhimaan(1973), Saudaagar(1973), Chupke Chupke(1975), Kabhie Kabhi(1976) போன்ற படங்களில் பல மாறுபட்ட வேடங்களையும் திறமையாகச் செய்து வந்தார் அமிதாப்.


1976ல் மூன்று முடிச்சு படத்தில் எதிர்மறைக் கதாநாயகனாகத் தோன்றி வில்லன் நடிகராக அறியப்பட்டார் ரஜினி. தன்னுடைய சிகெரெட் ஸ்டைலை இப்படத்திலேயே அறிமுகப்படுத்தினார்.






1977 ல் பல வெற்றிப்படங்களைக் கொடுத்த அமிதாப் 1978 ல் வெளியான, சந்திர பாரோட் இயக்கி, சலீம்-ஜாவேத் எழுதிய Don திரைப்படத்தின் மூலம் அடுத்த இருபது ஆண்டுகளுக்கு அசைக்க முடியாத அகில இந்திய சூப்பர் ஸ்டார் ஆனார்.

1977ல் வில்லனாகவும் நல்ல வேடங்களிலும் மாறி மாறி நடித்து வந்த ரஜினிகாந்த் 1978ல் கருப்பு-வெள்ளையில் எடுக்கப்பட்ட பைரவி படம் தொடங்கி முள்ளும் மலரும், சிங்கப்பூரில் வண்ணமயமாக எடுக்கப்பட்ட பிரியா ஆகிய படங்களில் நடித்து கதாநாயகனாக உயர்ந்தார்.


1978ல் வெளியாகி, புகழ்பெற்ற Don திரைப்படத்தை கே.பாலாஜி தமிழில் 'பில்லா' என்ற பெயரில் படமாக்கினார்.அதுவரை சிவாஜியை வைத்தே படமெடுத்து வந்த அவர் முதல்முறையாக அடுத்த தலைமுறை நடிகரான ரஜினியுடன் இணைந்தார்.இப்படம் 260 நாட்கள் ஓடி ரஜினியை முன்னணி கதாநாயகனாக வலிமையாக நிலைநிறுத்தியது.



1981 ல்  Deewaar(தீவார்)1975 திரைப்படத்தை தீ என்ற பெயரில் ரஜினி-பாலாஜி கூட்டணியே வெளியிட்டது.ஷஷிகபூர் வேடத்தில் சுமனும் நிருபா ராய் வேடத்தில் சௌகார் ஜானகியும் நடித்தனர்.மூலப்படத்தில் அமிதாப் பச்சனுக்கு பாடல் காட்சிகள் இல்லை.ரஜினியின் வேடம் இந்தியில்  உள்ளதைப்போல்  அத்தனை இறுக்கமாக வடிவமைக்கப்படவில்லை.

இந்திப்படங்களைப் பொறுத்தவரை யஷ் சோப்ரா,ரிஷிகேஷ் முகர்ஜி போன்ற தரமான படைப்பாளிகள் இருந்தனர். ஆனால் தென்னிந்தியப் படங்கள் பெரும்பாலும் மசாலாப் படங்களே.அவையே  சூப்பர் ஸ்டாரைத் தீர்மானிப்பவையாக உருமாறத் தொடங்கின.எனவே இப்படத்தைத் தவிர அமிதாப் சிறந்த நடிகராக அறியப்பட்ட எந்தப்படத்தையும் ரஜினி ரீமேக் செய்யவில்லை.

யஷ் சோப்ரா 
 சச்சின் தேவ் பர்மன்,அமிதாப், ரிஷிகேஷ் முகர்ஜி



**************** தொடரும் ****************

ஞாயிறு, 26 மார்ச், 2017

வந்தார் பில்லா வென்றார் கபாலி - 01

1975
இந்திப்படவுலகில் மகத்தான  ஆண்டு. தமிழ்ப்படவுலகில்  மறக்க முடியாத ஆண்டு.
1969 ல் வெளியான ஆராதனா முதல் 1974ல் வெளியான பிரேம் நகர் வரை தன் கொடியை உயரப் பறக்கவிட்டு இந்திய சூப்பர் ஸ்டார் என்ற கருத்து பேசப்படத் தொடக்கப்புள்ளியாக விளங்கிய ராஜேஷ் கன்னா தன் செல்வாக்கைக் கொஞ்சம் கொஞ்சமாகவும் கூடிய சீக்கிரத்தில் மொத்தமாகவும் இழந்த ஆண்டு அது.

ஆராதனா படத்தில் ஷர்மிளா தாகூர், ராஜேஷ் கன்னா மற்றும் சாச்சா ஜோதாவில் அவரது இரட்டை வேடங்கள்




பாலிவுட் வண்ணமயமாக ஒளிரத்தொடங்கிய சில ஆண்டுகளில் 1969ல்  தன் ஒரே கருப்பு-வெள்ளைப் படமான “சாத் ஹிந்துஸ்தானி” படத்தில் ஏழு முக்கிய வேடங்களில் ஒருவராக இஸ்லாமியக் கவிஞர் அன்வர் அலி என்ற  வேடமேற்று அறிமுகமான அமிதாப் பச்சன் அப்படத்திற்காக சிறந்த புதுமுகத்திற்கான தேசிய விருது பெற்றார்.



1971ல் கை கொடுத்த தெய்வம் படத்தின் இந்தி பதிப்பான ப்யார் கி கஹானியில் கதாநாயகனாக நடிக்கத் தொடங்கினார்.அந்தப் படத்தில் நடிகர் திலகத்தைப் போலவே பாரதியார் வேடமிட்டு பாடல்காட்சியில் நடித்தார் அமிதாப்.

பாம்பே டு கோவா(மெட்ராஸ் டு பாண்டிச்சேரி),சன்ஜோக்(இரு கோடுகள்) ஆகிய படங்களின் மூலம் நாயகனாகத் தொடர்ந்து வந்த அமிதாப் பச்சனுக்கு 1973ல் வெளிவந்த ஜஞ்சீர் என்ற திரைப்படம் பெருவெற்றியைப் பெற்றுத் தந்தது. அமிதாப் பச்சன்,பிரான் இருவரது வேடங்களையும் ஏற்று நடித்து, இப்படத்தை  புரட்சி நடிகர் எம்ஜியார், சிரித்து வாழ வேண்டும்(1973) என்ற பெயரில் ரீமேக் செய்தார்.



Zanjeer படத்தின் கதாசிரியர்கள் என்ற முறையில் அமிதாப் பச்சனின் திறமையை நன்கு அறிந்த சலீம்-ஜாவேத் 1975ல் தீவார் படத்துக்கு ராஜேஷ் கன்னாவிற்கு பதிலாக அமிதாப்பின் பெயரைப் பரிந்துரைத்தனர்.அதிரடி கதைமன்னர்களான இவர்கள் எழுதிய பெரும்பாலான படங்களில் அமிதாப் பச்சனே கதாநாயகனாக இருந்தார்.




சலீம்-ஜாவேத் எழுதி, 1975ல் வெளியான ஷோலே, Key of Indian Cinema என பாராட்டப்பட்டு Gangster படங்களின் தொடக்கமாக இந்தியாவிற்கே அமைந்த தீவார் ஆகிய படங்களில் நடித்த பச்சன் Angry Young Man என்ற இமேஜைப் பெற்று சூப்பர் ஸ்டாராக உயரத் தொடங்கினார்.
தீவார் படத்தில்

ஷோலே படத்தின் முக்கிய நடிகர்கள் அமிதாப், தர்மேந்திரா, சஞ்சீவ்குமார், அம்ஜத் கான்



அதே 1975ல் மிகச்சிறிய கதாப்பாத்திரத்தில், எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகியோரின் படங்கள் தவிர கட்டாய கலரில் தயாரிக்கப்படாத காலத்தில் தமிழ் சினிமாவில் நுழைந்தார் ரஜினி.

**************** தொடரும் ****************